உணவு டெலிவரி ஜாம்பவான் தீபிந்தர் கோயல், சமீபத்தில் சோமாட்டோ சிஇஓ பதவியிலிருந்து விலகி, தனது முழுக் கவனத்தையும் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் (Longevity) தொடர்பான ஆராய்ச்சிகளில் திருப்பி வருகிறார். அதன் ஒரு பகுதியாக உருவானதுதான் ‘Temple’ என்ற இந்த வியக்கத்தக்க நிறுவனம். இது ஒரு சாதாரண ஸ்மார்ட்வாட்ச் நிறுவனம் அல்ல; உங்கள் மூளையில் ஓடும் இரத்த ஓட்டத்தை (Cerebral Blood Flow) துல்லியமாகக் கண்காணிக்கும் அதிநவீன அணியக்கூடிய கருவியை (Wearable) உருவாக்கி வருகிறது.
என்ன செய்யப்போகிறது இந்த ‘Temple’ கருவி?
பொதுவாக நாம் அணியும் ஸ்மார்ட்வாட்ச்கள் இதயத் துடிப்பு, தூக்கம், இரத்த ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடும். ஆனால், தீபிந்தர் கோயலின் இந்த ‘டெம்பிள்’ கருவி, தலையின் பக்கவாட்டில் (Temple) பொருத்தப்பட்டு, மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.

-
மூளை ஆரோக்கியம்: வயது முதிர்வால் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதைக் கண்டறிந்து, அதைத் தடுக்க வழிகாட்டும்.
-
செயல்திறன் மேம்பாடு: விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிக மூளை உழைப்பு கொண்டவர்கள், தங்களின் கவனத்திறன் (Focus) எப்போது குறைகிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
-
புதிய கருதுகோள்: ‘ஈர்ப்பு விசை வயது முதிர்வு’ (Gravity Ageing Hypothesis) என்ற தனது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படையில், ஈர்ப்பு விசையினால் மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதைக் கண்டறிய தீபிந்தர் இதை உருவாக்கி வருகிறார்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிரம்மாண்ட முதலீடு
இந்த ஸ்டார்ட்அப்பின் சிறப்பம்சமே, இதற்குத் திரட்டப்பட்ட 54 மில்லியன் டாலர் நிதிதான். இது ஒரு ‘பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி’ (Friends and Family) ரவுண்ட் மூலம் பெறப்பட்டது. அதாவது, தீபிந்தர் மீதும் அவரது ஐடியா மீதும் நம்பிக்கை கொண்ட சக தொழிலதிபர்களான விஜய் சேகர் சர்மா (Paytm), குணால் ஷா (CRED), நிதின் காமத் (Zerodha) போன்றோர் இதில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது சுமார் 1,700 கோடி ரூபாயைத் (190 Million USD) தொட்டுள்ளது. இன்னும் சந்தைக்கே வராத ஒரு தயாரிப்பிற்கு இவ்வளவு பெரிய மதிப்பு கிடைத்திருப்பது தீபிந்தர் கோயலின் கடந்த கால வெற்றிகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
சவால்கள் என்ன?
ஏற்கனவே ‘ஊரா’ (Oura), ‘ஹூப்’ (Whoop), ‘கார்மின்’ (Garmin) போன்ற ஜாம்பவான்கள் அணியக்கூடிய கருவிகள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒரு புதிய ‘மூளை கண்காணிப்பு’ கருவியை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது ஒரு கேள்விக்குறிதான். மேலும், மருத்துவர்கள் பலர் ‘ஈர்ப்பு விசைக்கும் வயது முதிர்வுக்கும்’ உள்ள தொடர்பை இன்னும் அறிவியல் பூர்வமாக முழுமையாக ஏற்கவில்லை.
இருப்பினும், சோமாட்டோ மூலம் உணவை நம் கதவுக்கே கொண்டு வந்த தீபிந்தர், இப்போது நம் மூளையின் ஆரோக்கியத்தையும் நம் கைகளுக்குக் கொண்டு வருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அபராஜித்

Related Posts
பில்லியன் டாலர் மாயவலை:ஏஐ முதலீடுகளுக்குப் பின்னால் இருக்கும் டிஜிட்டல் நிழல் உலகக் கணக்குகள்!
வங்கித் துறையில் மெகா மாற்றம்: நேட்வெஸ்ட் வங்கியின் AI புரட்சி!
⚽️கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் முதலீடு: AI துறையில் ‘பெர்பிளெக்சிட்டி’யின் எழுச்சி!