May 26, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

மெஷின் தான் முதலாளி.. மனுஷன் தான் தொழிலாளி: ‘ரென்ட்-ஏ-ஹியூமன்’ கிளப்பும் அதிரடி சர்ச்சை!

றிவியல் புனைகதை படங்களில் வருவது போல, ஒருநாள் ரோபோக்கள் நம்மை அடிமைப்படுத்தும் என்று பலரும் பயந்த காலம் போய், இன்று ஒரு ஏஐ ஏஜென்ட் (AI Agent) நமக்குப் பிடித்தமான வேலையைத் தந்து, அதற்குச் சம்பளமும் தரும் என்று நம்பி லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். ஆனால், இதில் இருக்கும் ‘ட்விஸ்ட்’ என்னவென்றால், அந்த வேலையைக் கொடுப்பதும் ஏஐ, அந்த வேலை நடப்பதாக நாடகம் ஆடுவதும் ஏஐ என்பதுதான். இது ஏஐ-யின் அசுர வளர்ச்சியா அல்லது மனிதர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் வெளிப்பாடா?

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ரென்ட்-ஏ-ஹியூமன்’ (RentAHuman) என்ற பெயரில் ஒரு இணையதளம் அறிமுகமானது. இதன் கான்செப்ட் மிக எளிது: தானாகச் செயல்படும் ஏஐ ஏஜென்ட்கள் (Autonomous AI Agents), தங்களால் செய்ய முடியாத சில ‘பிசிகல்’ வேலைகளைச் செய்ய மனிதர்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும். உதாரணமாக, ஒரு பார்சலை எடுப்பது, ஒரு இடத்திற்குச் சென்று நேரில் சரிபார்ப்பது அல்லது பூக்களை டெலிவரி செய்வது போன்ற வேலைகள்.

அரை மில்லியன் மக்களின் ஆர்வம்:

இந்தத் தளம் அறிமுகமான வெறும் 14 நாட்களில், சுமார் 4,70,000 பேர் (கிட்டத்தட்ட அரை மில்லியன்) இதில் வேலை தேடிப் பதிவு செய்துள்ளனர். தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான்கள் இதைக் கண்டு வியந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் உண்மை சற்றே கசப்பானது.

வயர்டு (Wired) நடத்திய ‘ஆபரேஷன்’ டெஸ்ட்:

சர்வதேசத் தொழில்நுட்ப இதழான ‘வயர்டு’, இந்தத் தளம் உண்மையிலேயே வேலை செய்கிறதா என்பதைச் சோதித்துப் பார்த்தது. ஏஐ ஏஜென்ட்கள் போட்டிருந்த பல வேலைகளுக்கு அவர்கள் விண்ணப்பித்தனர். கடைசியாக ஒரு ஏஜென்ட் பூக்களை டெலிவரி செய்ய 110 டாலர் (சுமார் 9,000 ரூபாய்) சம்பளம் தருவதாகக் கூறி அவர்களை ‘ஹயர்’ செய்தது.

ஆனால், களத்தில் இறங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அது ஒரு நிஜமான வேலையே கிடையாது என்று. அந்தப் பணம் கைக்கு வரவில்லை, உண்மையில் அந்தப் பூக்களை டெலிவரி செய்ய வேண்டிய அவசியமும் யாருக்கும் இருக்கவில்லை.

இது ஒரு ‘மார்க்கெட்டிங்’ நாடகமா?

ஆராய்ச்சியின் முடிவில் தெரிந்த விஷயம் என்னவென்றால், இது மற்றொரு ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள நடத்திய ஒரு அதிரடி பிரச்சாரம் என்பதுதான். தற்போது இருக்கும் ஏஐ ஏஜென்ட்களுக்குத் தானாகப் பணப் பரிமாற்றம் (Payment) செய்யும் வசதியோ அல்லது வேலைகளைச் சரியாகப் பிரித்துக் கொடுக்கும் திறனோ இன்னும் முழுமையாகக் கைவரவில்லை. ஆனாலும், அரை மில்லியன் மக்கள் இதில் பதிவு செய்திருப்பது, எதிர்காலத்தில் ஏஐ-யிடம் வேலை பார்க்க மக்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஏமாற்றமா? எதிர்பார்ப்பா?

வேலை தேடும் ஏமாற்றத்தில் இருக்கும் சாமானிய மக்களை, இதுபோன்ற போலி விளம்பரங்கள் மூலம் ஈர்ப்பது அறமற்ற செயல் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதே சமயம், வருங்காலத்தில் “மெஷின்கள் நமக்கு வேலை கொடுக்கும்” என்ற சூழல் உருவாகப் போவதற்கான ஒரு முன்னோட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில், ‘ரென்ட்-ஏ-ஹியூமன்’ தளம் தற்போது ஒரு போலியான விளம்பர உத்தியாக இருக்கலாம். ஆனால், அது கிளப்பியிருக்கும் அலை நிஜமானது.

Spread the love
error: Content is protected !!