May 30, 2026

Namma Multimedia

The gold mine of tomorrow's world

நோயாளிகளுக்கு இலவசக் கஞ்சி… சென்னை அரசு மருத்துவமனையில் 7 ஆண்டுகளாகத் தொடரும் சேவை!

நோயின் வலியால் வாடும் மக்களுக்குப் பசியின் வலியில் இருந்தாவது விடுப்பு அளிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார் ராஜீவ். மழையோ, வெயிலோ, குளிரோ, விடுமுறையோ, ஊரடங்கோ எந்தக் காலகட்டத்திலும் தவறுவதில்லை

முன்னலாம் ஆஸ்பிடல்ல சேர்ற நோயாளிங்களுக்குக் குடிக்க கஞ்சி எதும் கிடைக்காது, பேஷண்ட் அட்டெண்டர்ங்களாம் ஜூஸ் கடைங்கல்ல போய் கஞ்சி அடிச்சுத்தர சொல்லி வாங்கிட்டு போவாங்க, இப்படி ஜனமெல்லாம் கஷ்டப்படறத பாத்துட்டு இருந்தபோதுதான் நாம ஏன் இவங்களுக்கு உதவக்கூடாதுனு ஒரு எண்ணம் வர, ஆரம்பத்துல ஒரு 2-5 கிலோ வர கஞ்சி மட்டும் கொடுத்துட்டு இருந்தேன். “நாளாக நாளாக நான் செய்றதைப் பாத்துட்டு தெரிஞ்சவங்க, நண்பர்கள் எல்லாம் உதவுறேன்னு முன்வந்தாங்க. அப்ப இருந்து குடுக்க ஆரம்பிச்சு இன்னைக்கு 7 வருஷம் ஆகிப்போச்சு” என்று வெகு இயல்பாகப் பேசுகிறார் ராஜீவ்.

நண்பர்களிடமிருந்து கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, பொதுமக்களும் தங்கள் பிறந்தநாள், திருமண நாட்களின்போது பணமாகவும், பொருளாகவும் ராஜீவுக்கு வழங்கத் தொடங்கினர். கழுத்தில் ருத்ராட்ச மாலையும் பாக்கெட்டில் வள்ளலார் படமுமாகக் காட்சியளிக்கும் ராஜீவ், வடலூர் சத்திய தருமசாலையில் ஏற்றப்பட்ட அணையா நெருப்பின் கங்கைக் கடத்திவந்தாற்போல தன் கடையில் தினமும் 300 பேர் பசியாற்றச் சமைத்துவருகிறார்.

“தினமும் மதியம் 12.30 மணிக்குக் கஞ்சியோட சேர்த்து ஒரு கலவை சாதம், அல்லது ஸ்பான்ஸர் கொடுக்கிற சாப்பாடு கண்டிப்பா தந்துருவோம், அதேபோல இரவு உணவுக்கு எத்தனையோ வகை உணவிருந்தாலும் இடியப்பம் தேங்காய்ப்பால் தான் நாம வழக்கமாக் கொடுத்திட்டு வர்றோம்” என்கிறார்.

முன்னலாம் நோயாளிங்க ஒருத்தருக்கு ஒரு பொட்டலம்னுதான் குடுத்துட்டு இருந்தோம், எப்பவும் ஒரு வயசான அம்மா மட்டும் 2 பொட்டலம் கேட்டுட்டு நிப்பாங்க. சரினு கடைசியா வர்றத பாத்து குடுத்தனுப்புவோம், பொறுத்திருந்து வாங்கிட்டு போவாங்க. ஒருமுறை ஆஸ்பிடல் உள்ள போகும்படி ஒரு சூழ்நிலை, அப்ப ஒரு வார்ட்ல இந்த அம்மா தன்னோட வயசான கணவரோட இருக்கறதைப் பாத்தேன். அந்த அம்மாவும் என்னைப் பாத்துச்சு, ஆனா அதோட அந்தப் பார்வை ‘இத்தன நாள் இவருக்காகவும் சேத்து வாங்கிட்டுப்போறதுக்குதான் என்ன நிக்கவெச்ச’னு என்கிட்டே சொல்றாப்போல இருந்துச்சு. அந்த நொடி கண்முன்ன இன்னும் இருக்கு”என்று கண்ணீர் கொப்பளிக்க தன் வாழ்வின் மறக்கமுடியாத நிகழ்வாக இதைப் பகிர்கிறார். அன்னிலேந்து கணக்குலாம் பாக்கறதில்ல, பசினு கேட்டா குடுத்தனுப்பிருவோம். மக்களைப் பொறுத்தவரை ஸ்பான்ஸர்லாம் கெடயாது, வண்டிய கடவுள் மாதிரி நினைச்சிட்டு சாப்பாடு வாங்கிட்டு போவாங்க” என்கிறார்

கிராமங்களிலிருந்து வைத்தியம் பார்க்க வருபவர்களிடம் பணம் எல்லாம் அதிகம் இருக்காது, அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்; அதுவும் உணவளித்து உதவுவதுதான் சரியானதாய் இருக்கும் என்று நம்புகிறார் ராஜீவ். மேலும், ஆதரவற்று வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் சேவையையும் சத்தமின்றிச் செய்துவருகிறார். தனது கடையிலேயே உட்கார்ந்திருந்து கணினியை இயக்கிக் கொண்டிருந்த ஒரு முதியவரைக் காண்பித்து ‘இதோ இவருக்கும் ஒரு கம்பெனியில வேலை பேசியாச்சு’ என்று மகிழ்ச்சியாகக் கூறுகிறார்

உதவி செய்வது உபகாரமாய் இருப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நோயெல்லாம் குணமாகி விடைபெறும் தருணத்தில் வந்து “ஊருக்கு போறோம்”னு சொல்றவங்க கிட்ட ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லமுடியாமல் லேசாகத் தலையசைத்து வழியனுப்புவதுதான் மனநிறைவாக இருக்கும் என்கிறார் ராஜீவ்.

Spread the love
error: Content is protected !!