இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்க்கு 60-ம் திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நிலவுகின்றது. என்றாலும் இந்த 60-ம் பிறந்த நாள் மட்டும் அவ்வளவு சிறப்பு ஏன், மீண்டும் திருமணம் அதாவது 60-ம் திருமணம் ஏன் நடத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.
ஒருவர் பிறந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்து வரும் நாள் சஷ்டியப்த பூர்த்தி நாளாகும் . அன்றைய தினம் கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை அந்த நாளின் சிறப்பை உணர்த்துகிறது.அதாவது அவர் பிறந்து 60 வருடங்கள் நிறை வடைந்த நாளிற்கு அடுத்த நாள், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்பு மற்றும் ஆண்டு, மாதம் ஆகியவையும் மாறாமல் இருக்கும்.
ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது . அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுத்து ஒரு ஆயுளை அவர் முடித்துவிட்டார் என்பதால் திரும்பவும் திருமணம் செய்து வைப்பார்கள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் கூறுகிறோம். பூமியில் நாம் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், வருடமும் செல்லச் செல்ல நமது நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் இந்த விஷயத்தை நினைவின் கொண்டு ஒவ்வொரு வருடமும் நாம் இறைவனை நோக்கி முன்னேறுகிறோம் என்ற எண்ணம் வேண்டும்.
60 வயதிற்குள் எல்லா ஆசைகளையும் அறவே நீக்கிய பிறகு தான் சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60வது பிறந்த நாளைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம்.
60வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற பிறகு தான், தனது என்ற பற்றையும் துறந்து தன்னுடைய மகன், மகள், சொந்த, பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து அனைவரும் தன் மக்களே, உற்றம், சுற்றமே என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தியாக வேண்டும்.அப்போது தான் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறோம் .
70வது வயதிலிருந்து நம்மை சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
சாதி, மத, இனம் , செடி, கொடி, மனிதன், விலங்கு, உயிருள்ளது, ஜடப் பொருள் அனைத்திலும் இறைவனை காணும் நிலையை 80 வயதில் பெறும்போதுதான் சதாபிஷேகம் ஏற்கும் தகுதி பெறுகிறோம்.
சஷ்டியப்த பூர்த்தியன்று செய்யப்படும் பூஜையின்போது 64 கலசங்களில் தூய நீர் நிரப்பி, மந்திரங்கள் மூலம் நீரைப் புனிதப்படுத்தி அபிஷேகம் செய்வதின் காரணம் 64 கலசங்களும் 60 ஆண்டு தேவதைகளையும் அவற்றிற்கு அதிபதிகளாகிய அக்கினி, சூரியன், சந்திரன், வாயு ஆகியோரையும் குறிக்கும் .
1. பிரபவ முதல் விரோதி கிருதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு அக்கினி பகவான் அதிபதி
2. ஆங்கிரச முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரியன் அதிபதி
3.ஈஸ்வர முதல் துன்மதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திரன் அதிபதி
4.சித்திரபானு முதல் அட்சய வரையிலுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவான் அதிபதி
ஆணுக்கு 60 வயது நிறைவடைந்து 61 தொடங்கும்போது மணி விழாவும் , 71 வயது தொடங்கும் போது பவள விழாவும் , 81 வயது தொடங்கும்போது முத்து விழாவும் கொண்டாடப்படுகின்றன.

இந்த சஷ்டியப்த பூர்த்தி சடங்கை ஆலயம்,, திருமண மண்டபம், வீடு என எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றவர்களுக்கு திருமணம் செய்து பார்க்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. பொதுவாக, பெற்றோரின் அறுபதாம் திருமணத்திற்கான செலவுகளை பிள்ளைகளே செய்வார்கள். பிள்ளைகளே, தங்கள் பெற்றோரின் திருமணத்திற்கு அழைப்பது வழக்கம்..
திருமணத்தின்போது முதலில் குலதெய்வ பூஜை செய்த பின்பு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுள் விருத்தி ஹோமம், அமிர்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம், தன்வந்திரி ஹோமம் என ஹோமங்கள் செய்யப்பட்டு, கலச பூஜை செய்யப்படும்.
பிறகு 60 வயது பூர்த்தியான கணவன், தனது மனைவிக்கு புதுத் தாலி கட்டும் சடங்கு நடத்தப்படும். பூஜை முடிந்ததும், கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, மணமக்களின் பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள், மணமக்களுக்கு அபிஷேகம் செய்வார்கள். அறுபதாம் கல்யாணம் செய்துக் கொண்ட மணமக்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது மிகுந்த பாக்கியமாகக் கருதப்படுகிறது.
மணமக்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அல்லாமல், ஆலயத்தில் இறைவனை தரிசிக்க வருவோர் அனைவருமே மணமக்களின் மீது கலச நீரை ஊற்றி, ஆசீர்வாதம் பெறுவது வழக்கம்.
ஹோமங்களின் பலன்களால் தம்பதியருக்கு நோய், ஆரோக்கிய குறைவு ஏற்படுவதை தடுத்து, நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன பலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.

Related Posts
எழுத்தையும் படத்தையும் சமமாகப் பார்க்கும் மல்டிமாடல் ஏஐ: தொழில்நுட்ப உலகின் புதிய மைல்கல்!
கூகுளின் ‘லிட்டில் செஃப்’: தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் ‘ரெமி’ AI ஏஜென்ட்!
தடுமாறும் சட்டங்கள்.. தடம் மாறும் AI!